Sunday, July 26, 2020

கிறுக்கு ஓட்டம் : : :

சில டீன் வயது மதிக்கத்தக்க இளைஞர்கள்  சிலர் 
- வெள்ளி கிழமை பின்னேரம் 
- இரு பெருநாளுக்கும் முந்திய மாலை நேரங்கள் 
- மற்றும் சில புத்தாண்டு தினத்துக்கு முந்திய நாள் மாலை வேளைகளில் 

தங்களது மோட்டார் சைக்கிளை மிக வேகமாக ஓட்டுவார்கள், தேடிப்பார்த்தால் அந்த ஓட்டத்திட்கு எந்த காரணமும் இல்லை. ஆனால் ஏன் இவ்வாறு வேகமாக ஓடுகின்றார்கள் என்றுமட்டும் புரியாத புதிராகவே இருக்கின்றது.

Saturday, July 18, 2020

சுவர்க்கத்து கன்னிகள் - 01

(அறிமுகம்)
இறைவன் மனிதனை இயற்கையாகவே தங்கம், வெள்ளி, பணம், வாகனங்கள் மற்றும் கால்நடைகள் போன்றவற்றில் நாட்டம் உள்ளவனாகவே படைத்துள்ளான். மேலும் இவற்றை படைத்தது மட்டுமல்லாமல் அவற்றை சோதனைப்பொருட்களாக ஆக்கியுள்ளான். இந்த சோதனை பொருட்களை மனிதன் எவ்வாறு தன் இச்சைகளுக்கு மத்தியில் கையாளப்போகிறான் என்பதை சோதிப்பதற்கு உரியதாகும். இவற்றை மறுமைக்காக பயன்படுத்துவானாயின் இறைவனிடத்தில் மனிதன் வெற்றி பெற்றவன் ஆகின்றான். மாறாக என்ன நோக்கத்திற்காக தான் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளான் என்பதை மறந்து தனது அதி உச்ச இச்சைகளுக்கு இவற்றை பயன்படுத்துவானாயின் நிலையான மறு உலக வாழ்க்கையில் தோல்வி அடைந்தவனாகின்றான்.

இவ்வாறே, இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆணுக்கு பெண்ணின் ஆசையையும், பெண்ணுக்கு ஆணின் ஆசையையும் வைத்தே படைத்துள்ளான். இறைவன் தந்த சோதனைப் பொருட்களில் இந்த எதிர்ப்பால் ஆசையே மிகப் பெரும் சோதனையாகும். இறைவனின் இந்த சோதனையில் மனிதன் தன் இச்சைக்கு கட்டுப்பட்டு தவறான முறையில் தனது இச்சைகளை நிறைவேற்றி மறு உலக வாழ்க்கையில் தோல்வி அடைபவனாகவோ அல்லது நெறி தவறாது இறைவன் மற்றும் இறை தூதர் கூறிய பிரகாரம் முறையாக திருமணம் செய்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றி பெறுபவனாக இருக்கின்றான். 

தற்காலத்தில் இந்த சோதனையானது மிக அதிகமாகவே உள்ளது ஏனெனில், நாம் வாழும் சூழல் நன்மை செய்யக்கூடிய சூழல் இல்லை மாறாக மிக பாவமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நன்மைகள் செய்வதை விட பாவங்கள் செய்வது இலகுவாக்கப்பட்டுள்ளது. 

இந்த சோதனையில் இருந்து வெற்றி பெற எங்களுக்கு வெற்றி பெற்றால் என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை அறிய ஊக்குவிக்கப்படுகின்றது. நெறி தவறி தன் இச்சைக்கு தலை வணங்கி போகாமல் தனது இச்சைகளை கட்டுப்படுத்தி வாழ்ந்தால் இறைவனும் மற்றும் தூதர்களும் கிடைக்கப்போகும் வெகுமதிகளையும் மற்றும் அதைப்பற்றிய தெளிவான விளக்கங்களையும் அருளியுள்ளார்கள். 

சுவர்க்கம்:
சுவர்க்கமானது மரணமற்ற மற்றும் ஒரு மனிதன் என்னவெல்லம் ஆசைப்படுகின்றானோ அவை அனைத்தையும் பெற்றுத்தரக்கூடிய ஒரு இடமாகும். மேலும் இவ்வுலக வாழ்க்கையை விட முழுமையான மற்றும் திருப்தியடைந்த  சந்தோஷத்தையும் தரக்கூடிய ஒரு இடமாகும். உதாரணமாக இவ்வுலகில் தாகித்த ஒரு மனிதன்,  தனக்கு மிகவும் பிடித்ததை சிறிதளவு அருந்தும்போது வயிறு நிரம்பிவிடும் ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் மீண்டும் தாகம் எடுக்கும். மாறாக சுவர்க்கத்தில் தனக்கு பிடித்ததை எவ்வளவு வேண்டுமென்றாலும் அருந்தி திருப்தி அடையக்கூடிய பாக்கியத்தை பெறக்கூடியதாக இருக்கும். 

இதே போல்தான் சுவர்க்கத்தில் இருக்கும் பெண்கள் இவ்வுலகில் உள்ள பெண்களை விட பல மடங்கு உயர்ந்தவர்கள். ஒரு மனிதனுக்கு இதைப்பற்றி முற்று முழுதாக தெரிந்தால் அவன் தீமையான செயற்பாடுகளை விட்டு வெகு தூரமாவான். இந்த தொடரில்  இயன்ற அளவு அல் குர் ஆன், தப்ஸீர், ஹதீஸ் போன்றவற்றிலிருந்து சுவர்க்கத்து பெண்கள் மற்றும் அவர்களின் இயல்புகள் என்பவற்றை தொகுத்து தரப்படும். 

நன்றியுடன்,
17 ஜூலை 2020

Tuesday, July 7, 2020

ஆதம் (அலை) அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது.

பின்வரும் குர்ஆன் வசனங்களை நன்றாக கவனியுங்கள்.

இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
(அல்குர்ஆன் : 2:31)

அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 2:32)

“ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
(அல்குர்ஆன் : 2:33)

இறைவன் முதல் மனிதனும் நபியுமான ஆதம் (அலை) அவர்களுக்கு எல்லாப்பொருட்களின் பெயரையும் கற்றுக்கொடுத்தான் என்று சொல்லப்படுகின்றது. இந்த எல்லாப்பொருட்கள் என்பது அக்காலத்தில் இருந்த மற்றும் காட்டப்பட்ட பொருட்களா அல்லது உலகம் தொடக்கம் இறுதி நாள் வரும் வரை உள்ள பொருட்களின் பெயர்களா? இயலுமானவர்கள் இன்னும் இது சம்பந்தமாக தேடுங்கள், இங்கு சமர்ப்பியுங்கள்.

Thursday, July 2, 2020

பஸார் மற்றும் கடைகளுக்கு போனால் விரைவில் திரும்பிவர வேண்டும் ஏன்?

ஏனெனில், பெரிய பாவச்செயல்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக நடைபெறும் இடங்களில் கடையும் ஒன்றாகும். சரி எப்படி ஒரே இடத்தில் எல்லா பாவச்செயல்களும் ஒன்றாக நடக்கின்றது என்று பார்ப்போம்.

₹₹₹ பொய்: 
பொய் உரைக்காமல் தற்பொழுது எந்த ஒரு வியாபாரமும் நடப்பதில்லை. வாங்குபவர் பொய் சொல்லி தனது பொருளை விற்க முனைவார் அல்லது வாங்குபவர் பொய் சொல்லி அதனை வாங்க முனைவார்.

[இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
இறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், 'பொய் கூறுவதும்' அல்லது 'பொய்ச் சாட்சியம் சொல்வதும்' பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும். 
இதன் அறிவிப்பாளரான அனஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் 'பெரும் பாவங்கள்' என்று வந்துள்ளது. 
ஸஹீஹ் புகாரி : 6871. 
அத்தியாயம் : 87. இழப்பீடுகள்]

₹₹₹ புறம் கூறுதல்:
ஒரு கடைக்காரரைப்பற்றி இன்னொரு கடைக்காரர் புறம் கூறாமல் எந்த ஒரு வியாபாரமும் இல்லை.
[குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
(அல்குர்ஆன் : 104:1)]

₹₹₹ ஏமாற்றுதல்:
உங்களால் வாங்கப்படும் ஒவ்வொரு பொருட்களும் உங்களை ஏம்மாற்றியே விற்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு. ஆனால் அதுவே உண்மையாகும். உங்களால் வாங்கப்படும் எந்தப்பொருளும் உங்களிடம் கலப்படமில்லாமல் வருவதில்லை, இரசாயன நஞ்சாக்கல் இல்லாமல் வருவதில்லை, அழகாக்கப்படாமல் வருவதில்லை, ஏனெனில் பல்வேறு காரணன்ஹ்களுக்காக இவை நடைபெறுகின்றன.

[அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபி(ஸல்) அவர்கள். 'நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால் 'ஏமாற்றுதல் இருக்கக் கூடாது!' என்று கூறிவிடுவீராக! (ஏமாற்றியது தெரியவந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு!)' என்றார்கள். 
ஸஹீஹ் புகாரி : 2117. 
அத்தியாயம் : 34. வியாபாரம்]

₹₹₹ பொய்ச்சத்தியம் செய்தல்:
பொய்ச்சத்தியம் இப்போது மிக  சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. தாங்கள் எவ்வளவு ஒரு பெரிய பாவம் ஒன்றை செய்கிறோம் என்று தெரியாத அளவற்கு இந்த பொய்ச்சத்தியம் மலிந்து விட்டது. இந்த சொற்கள் அல்லது சொற்றொடர்கள் இல்லாது வியாபாரம் இல்லை என்றே ஆகிவிட்டது. உதாரணமாக கடவுள் சத்தியமாக, ஆண்டவன் அறிய, அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அல்லாஹ் அறிய, வழ்ழாஹி, தழ்ழாஹி என்று பல.

[அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவர் ஒரு பிரமாண வாக்குமூலத்தின்போது ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகத் திட்டமிட்டுப் பொய்ச்சத்தியம் செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில்தான் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்" என்று கூறினார்கள். அப்போதுதான் "எவர் அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ..." என்று தொடங்கும் (3:77ஆவது) வசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 220. 
அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை]

₹₹₹ வட்டி:
வட்டியில்லாத இடங்கள் மற்றும் வியாபாரத்தாபனங்கள் இல்லை என்றே கூறலாம். இதில் க்ரெடிட் கார்ட் எனும் மிகப்பெரிய வட்டி மாபியாவும் அங்குதான் உள்ளது. வட்டி பல்வேறு வடிவங்களில் உங்களை வந்து சேரும் அல்லது மற்றவர்களுக்கு நீங்கள் சேர்ப்பிப்பீர்கள் என்பது வெளிப்படையான உண்மை. 

[யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
(அல்குர்ஆன் : 2:275)]

₹₹₹ விபச்சாரம்:
தொடர்ந்து எழுதுவேன் இன்ஷா அல்லாஹ்.